Tuesday, December 7, 2021

வ.உ.சிதம்பரனார்




விழுப்புரம் 05-09-2021 மாலை 4.00 மணி


மேலோர்கள் வெஞ்சிறையில் 
வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ 


படித்த படிப்பும் பட்டமும் பதவியும்
துச்சமாய் நினைத்த தூயவன் வ.உ.சி்
நடித்து நடித்து நாடாளும் பேர்வழிகள்
அறிவாரா அவரின் ஈகம் ?
எடுத்த காரியம் வெற்றியடைந்திட
எல்லா சொத்தையும் இழந்தவர் வ.உ.சி்
மடித்த சட்டையும் கலையாத அரசியலார்
மார்தட்டிக் கொள்கிறார் இது நியாயமா ?

சின்ன சின்ன உதவிகள் செய்தவர்
சீக்கிரம் ஆகிறார் அமைச்சராக
பொன்னை இழந்து தன்னை இழந்தவர்
பொய்வழக்கில் கைதியாய் இது நியாயமா ?
மண்ணைக் காத்திட மக்களைக் காத்திட
மார்பை உயரத்தியவர் சிறையிலே
தன்பெண்டு தன்பிள்ளை தம்மை  உயர்த்திடும்
தடியர்கள் அரசுப் பதவியிலே

வயலை ஏரியை ஆற்றை குளத்தை  விற்றவர் எல்லாம்  அமைச்சரிங்கே
அயலானை எதிர்த்து அத்தனையும் இழந்தவர்
அருமை தெரியலே நாட்டினிலே
துயிலாமல் வழக்காடி துயர்தாங்கி வாதாடி
துணிவாய் எதிர்த்தவர் தெரியலே
வயிற்றுப் பிழைப்புக் காய்
வாயாடி வென்றவர்
வளமாக வாழ்கிறார் காட்சியிங்கே
வரலாற்று நாயகன்
வள்ளுவத்தை வளர்த்தவன்
வான்புகழ் வ.வ.சி மாட்சியெங்கே ?


பட்டம் உதறினான் பதவி உதறினான்
சட்டம் உதறினான் நாட்டுக்கு
பாவிப் பயல்களின்
பழியாலே தன்வாழ்வில்
பஞ்சப் பனாதியானான்  நடுரோட்டிலே

நட்டம் இலாபம்
கணக்குப் பார்த்தவர்
சேர்த்தனர் சொத்தை
வாரிசுக்கே
சட்டம் படித்தும்
பரங்கியர் எதிர்த்ததால்
நட்டம் வ.உ.சி குடும்பத்துக்கே

அந்நியனுக்கு அடிபணிந்து
அரசி ஆலை
அவரெல்லாம் இன்றிங்கே பெரிய ஆளே
கண்ணியமாய் உழைத்தவரை தெரியவில்லை
கடலை ஆண்ட தலைவனுக்கோ
மதிப்பே இல்லை
நாட்டுக் கோட்டை
செட்டிமார்கள் வட்டிக்காக
நாட்டை விட்டு
அயலகங்கள் நாடிச் சென்றார்
போட்டி போட்டு இரங்கூன்,
மலேசியா  சொத்தை சேர்த்தார்
நாட்டை விட்டு
வெள்ளையரை ஓட்டுதற்கு
நம்தமிழர் மீண்டும்
கடலை ஆள்வதுதான்
நல்லவழி என்று
வ.உ.சி சபதமேற்றார்
காட்டை விற்று
வீட்டஐவிற்றுத்தானே
கப்பல் விட்டார்

கண்டதுமே பரங்கியர்கள் கலகலத்தார்
கண்படி கேசைபோட்டு சிறையில் வைத்தார்
பிணையெடுக்க முடியாத பிரிவில் போட்டார்
முனைமழுங்கா வீரத்தை உரசிப் பார்த்தார்
தனையிழந்தும் தளராத உறுதியோடு
தன்மான சிங்கமாய் எதிர்த்து நின்றார்


                       (வேறு )
சணல் பிரிக்கும் எந்திரத்தை சுற்றி சுற்றி
சதைப்பிய்ந்து கையெலாம் இரத்தக் காயம்
மணல் திருடும் கூட்டத்தார் மாபியாக்கள்
மாளிகைகள் கார்பவனி ஊர்வலங்கள்
அனல்தெறிக்கும் பேச்சுக் காரன் கால்களிளே
அடடா பிணைத்திருந்த சங்கிலிகள்
பணமிருந்தும் பதவியிருந்தும் உதறிவிட்டு
பாழ்சிறையில் செக்கிழுத்தார் சிதம்பரமும்

வெள்ளையரின் ஆட்சியிலே
வெங்கொடுமை சாக்காடு
கொள்ளையரின் ஆட்சியிலே கொடுமையென்னே வெட்கக்கேடு
தள்ளாத வயதினிலும்
தன்வயிற்றுப் பிழைப்புக்காய்
சில்லரையில் மண்ணெண்ணெய்
விற்றாரே
அல்லல்பட்டு வ.உ.சி செத்தாரே


வேறு எந்த நாட்டினிலும்
இப்படியோர் சோகம் உண்டா ?
விடுதலைக்கு உழைத்தவர்கள்
இப்படித்தான் செத்ததுண்டா?
ஏறுபோல் நடையழகன்
வ.உசி ஈகம்போல் கண்டதுண்டா?
எழுச்சிமிகு வீரனுக்கு
இப்படியோர் மரணம் நன்றா?

நம்பிவந்த மனைவி
மக்கள் நடுத்தெருவில்
கையேந்த பொறுத்துக் கொள்வேன்
நான்பிறந்த நாட்டுக்கந்த
நிலமையென்றால்  ஏற்கமாட்டேன்
கம்பீரமாய் கர்ஜித்த அரிமா தானே கடைசியிலே தவித்தது கஞ்சிக்காக
காடையர்கள் விடுதலையால் பதவிபெற்று
கர்மவீரன் ஈகத்தை மதிக்கவில்லை

அடிமையென இருந்த நாட்டில்  அதிகம் தொல்லை
அன்றாடச்  சித்ரவதைக் கோர் எல்லையில்லை
குடிகளுக் காய் குடும்பம் இழந்த தலைவனுக்கு
குடிப்பதற்கும் நீரில்லா அவல மிங்கே
கொடிகாக்க கொதித் தெழுந்த தலைவனுக்கு
கொள்ளையர்கள் கொடுத்த தெல்லாம் வறுமைதானே
தடியெடுத்த தடியனெல்லாம் தலைவ னிங்கே
தன்மான சிங்கத்துக்கோ மதிப்பே இல்லை

வ.உ.சி
இரட்டை ஆயுள் சிறையைப் பெற்றவர்
இளமை முழுதும் நாட்டுக்கே இழந்தவர்
பரங்கியர் கண்களில் பயத்தை விதைத்தவர்
பாற்கடல் குலுங்கிட கப்பல் விட்டவர்
மார்தட்டி பரங்கியரை மல்லுக்கு இழுத்தவர்
மானம் இழக்காத மாவீரம் படைத்தவர்
ஓர்நாளில் உலகையே உலுக்கிப் பார்த்தவர்
ஓயாது அடிமைத் தளை உடைத்திட உழைத்தவர்

தமிழை உயிராய் தலைமேல் வைத்தவர்
தன்னெழுத்தால் தமிழுக்கு அணிகலன் சேர்த்தவர்
வள்ளுவத்துக்கு உரையை அளித்தவர்
வான்புகழ் இலக்கியம் வார்த்துக் கொடுத்தவர்
கப்பல் விட்டிடும் ஆளுமை நிறைந்தவர்
கடைநடத்த தெரியாத வியாபாரி ஆனவர்
சொந்தக் கட்சியின் சூட்சியில் மடிந்தவர்
சுதந்திரம் பெற்றும் சுண்ணாம்பாய் வெந்தவர்

படை நடத்திடும் பக்குவம் தெரிந்தவர்
பாசாங்கு அறியாத பாரத புதல்வரவர்
காந்தியை எதிர்த்து திலகர்வழி சென்றவர்
காங்கிரஸ் சூட்சியில் காணாமல் போனவர்
சிராவயல் இளைஞர்கள் நூல்நூற்கும் காட்சியை
சிரித்துக் கண்டித்து சீர்திருத்தம் சொன்னவர்
இராட்டை பிடிக்கும் கைகளில் எல்லாம்
துமுக்கியை பிடிக்க தூண்டுகோள் ஆனவர்



கோவை சிறைமதிலும் உன் கீர்த்தி சொல்லும்
கொட்டடிகள் எல்லாம் உன் மாட்சி சொல்லும்
சாவை எதிர் கொண்ட வீரம் சொல்லும்
சரித்திரமே சாட்சியாகி உன் ஈகம சொல்லும்
                                (வேறு )
விடுதலை அடைந்ததும் விளைத்திட எத்தனை நினைத்திருப்பாய்
வீரமாய் முழங்கிய போதென்ன நினைத்திருப்பாய்
அந்நியர் விரட்டிட எப்படி உழைத்திருப்பாய்
-எத்தனை
ஆயிரம் இரவுகள் உறக்கத்தை தொலைத்திருப்பாய் 
பெற்ற விடுதலை நாட்டினில் உனக்கு நேர்ந்ததென்ன
பேடிகள் உந்தன் ஈகம் மறந்து செய்ததென்ன
கோடிகள் சேர்த்திட ஆட்சியாளர் கூத்தடித்ததென்ன
-உன்
கொடுமை கண்டும் அயர்ந்தவர்கள் படுத்ததென்ன
வீதியில் உன்னை அலைந்திட விட்டனரே
நாதியற்றவர் போலுன்னை நடத்தினரே

இந்திய தேசமே மனசாட்சி உனக்கிருந்தால்
இப்படியோர் ஈகத்தை புழுதியில் விடுவாயா ?
காந்திய தேசமே உனக்கு கருணை இருந்தால்
கப்பல் ஓட்டிய களப்போர் வீரன்  -மளிகை
கடைநடத்திடும் அவலத்துக்கு தள்ளுவாயா?

மண்ணைக் காத்திட 
பொன்னை பொருளை 
இழந்தவனை
மண்ணெண்ணய்க் 
கடைவைத்து 
பிழைத்திடப் பார்ப்பாயா ?
எல்லோரும் சுதந்திரம் சுவாசிக்க
தான் சுவாசிக்க மறந்தவனை
சில்லறை வணிகத்தில்
சிக்குண்டு பிழைக்க விடுவாயா ?

கல்வியில் சிறந்தவனை
கப்பலோட்டிய தமிழனை
வல்வில்ஓரி போல் வள்ளலை
சல்லிக்காசுக்கும் மதிக்காத
சனநாயகம் ஒரு கேடா ?

பல்லக்குத் தூக்காமல்
பாடைக்கும் அஞ்சாமல்
பரங்கியரை எதிர்த்தவனை
பாராமுகமாய் மறந்தீரே
பாருக்குள்ளே நல்ல நாடா?
பகர்வீரே ?

கடற்கரையில் கழிமுகத்தில்
உப்புக் காய்ச்சியதே
வீரமிக்க போராட்டமென்றால்
ககனத்தை ஆண்டவனை
கடலாதிக்கம் புரிந்தவனை
கால்காசுக்கும் மதிக்காமல்
ஆழ்கடல் மீதிலே
ஆரவாரமாய் கப்பல் விட்டானே வ.உ.சி
இந்த வீரத்துக்கு இணையுண்டா?
























 மாடாகப் பாடுபட்டு

மழை ழை வெய்யில

தாங்கிக்கிட்டு
ஓடாக உழைச்சு
பிள்ளைங்க
ஒசர உசுரு கொடுத்து
உழைச்சு ஜனங்க தவிக்க
உசுர வாங்கும் நீட்டு
உதவாதினி ஓட்டு

கஞ்சியின்னும் கூழுயின்னும்
கண்டதையும் குடிச்சு
காளை மாட்டை மேச்சு
களையை வெட்டி பொழைச்சு
கல்வி கற்க புள்ளைங்களை
காத தூரம் அனுப்பி
கவலை அணிஞ்சு கிடக்க

ஒட்டுமொத்த நாட்டுக்குமே
ஒரே தேர்வை புகுத்தி -ஏழைங்கல
ஓரமாக நிறுத்தி
ஓரவஞ்சனை செய்யும்
ஈரமில்லா தாயே
எதுக்கு எங்களுக்கு நீயே !

பன்னெண்டு வருஷ படிப்பு
பத்தாதா என்ன வெறுப்பு
பாழாப்போன சட்டம் -பிள்ளைங்கள
பாடையில் ஏத்தும் சட்டம்-இனி
செல்லாது உங்க கொட்டம்

பள்ளியிலே படிக்கும் போதே
பார்த்து பாத்து  ஸ்டெத்தெடுத்து
பலவருஷம் டாக்டராவே
வாழ்ந்து வந்த பிள்ளைங்கள
படிக்க வேணாமின்னு தடுக்க
பார்த்து வச்சு ஆப்பு
நீட்டு  என்னும் வேட்டு

கனவெல்லாம் கலைஞ்சு போக
நெனவெல்லாம் நீர்த்து போக
கழுத்தில் கயித்த மாட்டி
கருகும் பிஞ்சு உசுரு -உங்களுக்கு
உசுறு இல்ல மசுறு ?

அனிதாவை பறிகொடுத்தோம்
அழுதழுது புலம்பி நின்னோம்
அடுத்தடுத்து மரணங்கள்
அரச படுகொலை ரணங்கள்
வாழப்பிறந்த புள்ளையெல்லாம்
வாரிக்கொடுத்து மாரடிக்க -நாங்க
வாங்கிவந்த வரமா -இந்தமண்ணு
வாய்க்கரிசி வயலா ?

யாருக்குமே நெஞ்சமில்ல
கொஞ்சங்கூட ஈரமில்லே
கூறுகெட்ட தேசத்தில
குழந்தைளகள பறிகொடுத்து
கூடிநின்னு அழுவுறோம்
குமைஞ்சு நின்னு நொறுங்குறோம்

ஏட்டுக்கல்வி எட்டாதின்னு
எழுதி வைச்ச சட்டமா
எங்களையே வதைக்குறான்
எவந்தான் இதக் கேக்குறான் ?

தலைகீழா மாற்றம் வரும்
காலம் வெகுதூரமில்ல
கொலைகார கும்பல் அழியும்
நாளும் வெகுதூரமில்ல
சேர்ந்து வாங்க நடப்போம்
செறுபகையை முடிப்போம் !

ஆறாம் விரல்

 


ஆடுகளாய் சாய்ந்த மக்களெல்லாம்
அறிவைப் பெற்றனர் எழுத்தாலே
மேடு பள்ளங்கள் சமமாச்சு
மேல்கீழ் நிலைமைகள் சரியாச்சு
நாடுகள் சமைந்தன எழுத்தாலே
நன்மைகள் விளைந்தன எழுத்தாலே
கோடுகள் கலைந்தன எழுத்தாலே
கோட்டைகள் தகர்ந்தன எழுத்தாலே 

ஆறாம் விரலாம் எழுதுகோலால்
அத்தனை அரசையும் பெயர்த்தெடுத்தார்
கோரமுகங்களை இனங்காட்டி
கொள்கை முழக்கங்கள் தான்தீட்டி
நேராய் சமூகத்தை திசைதிருப்பி
நிமிர்த்திய நெம்புகோல் எழுதுகோல்கள்
பாராய் வரலாறு முழுவதிலும்
பாட்டை போட்டன எழுதுகோல்கள்

எழுதுகோல் ஆயுதம் என்றறிந்து
எதேச்ச திகாரர்கள் பயந்தார்கள்
எழுத்தாளர் அறிஞர்கள் அழித்தொழிக்க
எத்தனை சூழ்ச்சிகள் செய்தார்கள்
அச்சத்தை துறந்து அறிஞரெலாம்
ஆறாம் விரல் கொண்டு எதிர்த்தார்கள்
துச்சமென தூக்கி எறிந்தார்கள்
தூவல் புரட்சி படைத்தார்கள்











வேண்டும்


கைப்பிடித்து காலார நடக்க வேண்டும்
கதை கதைத்து கண் குளிர்ந்து சிரிக்க வேண்டும்
தைப்பொங்கல் போல நெஞ்சம் பொங்க வேண்டும்
தமிழ்ப் பேசி உலகமெல்லாம் திரிய வேண்டும்
பொய்ப் பேசி சண்டையிட்டு பிரியவேண்டும்
பொறுக்காமல் மறுகணமே இணையவேண்டும்
நொய்க் கஞ்சி போலத்தான் கொதிக்க வேண்டும்
நோன்பை போல் காதலைத் தான் மதிக்க வேண்டும்
மெய்த்தீண்டி மென்னுணர்வால் ஈர்க்கவேண்டும்
மேலுலகு கீழுலகு வெல்ல வேண்டும்

அன்றாடச் சிக்கல்களை மறக்க வேண்டும்
அரிசி பருப்பு போதாமை ஒதுக்க வேண்டும்
நன்றாக புரிந்துநாம் நடக்க வேண்டும்
நாற்றிசையும் நமக்காக விடிய வேண்டும்
தின்றதையே தின்னுவதை தள்ள வேண்டும்
தினம் புதுமை எண்ணத்தில் கொள்ள வேண்டும்
என்றும் இளமை மனத்தோடு இருக்க வேண்டும்
அப்படியே இந்த வாழ்வை வாழ வேண்டும்


நான் நினைக்கும் நேரம் நீ எனக்கு வேண்டும் நாளெல்லாம் உன்நினைப்பே எனக்கு வேண்டும்
தான் நினைத்து நடப்பதையே நிறுத்த வேண்டும்
தனக்காக வாழ்வதையே தவிர்க்க வேண்டும்
வானிடிந்து வீழ்ந்தாலும் உறுதி வேண்டும்
வாஞ்சையோடு வாழ்வையே  வாழ வேண்டும்
தேனிலவு மனத்தோடு தினமும் வேண்டும்
தெவிட்டாது அன்பை பறிமாற வேண்டும்

பூவுக்குள் மணமாக இருக்க வேண்டும்
 புத்தாண்டின் முதல் நாளாய் பிறக்க வேண்டும்
நாவுக்குள் தமிழாக  மணக்க வேண்டும்
நடைநடந்து பூமியை ரசிக்க வேண்டும்
சாவுக்கும் அஞ்சாமல் எதிர்க்க வேண்டும்
சந்தனமாய் அன்பையே அணிய வேண்டும்
கோவுக்கும் பணியாத கொள்கை வேண்டும்
கொடையாக உயிரையும் கொடுக்க வேண்டும்






Thursday, May 20, 2021

கொரோணா

 பூமிக்கோளம் முழுவதுமே 

புதிய வைரஸ் தொற்றுகள் 

சாமியில்லை காப்பாற்ற 

சரிந்து சாகும் மனிதர்கள் 

கோடி கோடி பணமிருந்தும் 

கோலம் அளக்கும் அறிவிருந்தும் 

கோரைப்புள்ளை போன்ற வைரஸ் 

கொடுக்கும் தொல்லை தாங்கல 

தனிமை சிறையில் அனைவரும் 

தவிக்கும் மக்கள் சாலையில். 

இனிமை இல்லை வாழ்க்கையென்ற

உண்மை புரியும் நாளிது 

முககவசம் அணிவதற்கும் 

முகம் சுளிக்கும் மனிதர்கள் 

கைகழுவச் சொல்லியும் 

காற்றில் விட்ட கழுதைகள் 

இடைவெளியே விடாமல் 

இடத்தில  கூடும் மந்தைகள் 

கொத்துக் கொத்தாய் நோய்த்தொற்றில்

கூடி சாகும் அவலங்கள் 

ஆஸ்பிட்டலில் இடமில்லை 

ஆம்புலன்சும் கிடைக்கல 

ஆக்சிஜனுக்கும் வழியில்லை 

அந்தோ மக்கள் வீதியில் 

அரசு என்ன செய்திடும் 

அறிவு வேண்டாமா மக்களே 

அவரவர் உயிரைக் காத்தல் 

அவரவரே பொறுப்படா

அலட்சியங்கள் இல்லாமல் 

அடங்கிக் கிடப்பீர் வீட்டிலே 

முககவசம் அணிந்து நீங்கள் 

முழு உயிரைக் காப்பீரே

இடைவெளியை விட்டு நின்று 

எட்ட ஓட்டுவீர் கொரோணாவை 

கைகளையே கழுவி கழுவி 

கருவறுப்பீர் கொரோணாவை 

கிருமி நாசனி பயன்படுத்தி 

கிழித்தெரிவீர் கொரோணாவை 

விளையாட்டாய் இல்லாமல் 

விழிப்போடு இருந்திடுவோம் 






சனாதனம்

மூடி வைத்து
கழுத்தறுத்தான்
ஒரு
முழு சனாதனி
அரைநிர்வாண
பக்கிரி

பரங்கியரிடம் பெற்ற
உரிமையை
ஒரு பனியா உயிருக்காக
பலகோடி
ஆதிக்குடிகளின் உயிர்களை
அடகு வைத்தோம்

அரும்பாடுபட்டு
செதுக்கி வைத்த
சாசனமும்
கேள்விக்குறியாகும்
பாசிசத்தின் பிடியில்

மீட்டெடுக்க
ஒரு மீட்பர் இருக்க
கைகளை சேர்த்து
களமாடுவோம்
அதிகாரம் அவசியம்
விடுதலை நிச்சயம்

அதிரும் பறை
நாரவாயண்களை
அச்சமூட்டுகிறது
நீதிமனுவை
மொழிபெயர்த்து
கொடுத்தால்
குட்டு
வெளியாகிவிடுமென்று
ட்வீட்டுகிறார்கள்

அசலை
தடைசெய்யாமல்
பெயர்ப்பை
வெளியிடக்கூடாதென
பொதுவெளியில்
கோஷமிடுகிறார்கள்

அம்பேத்கர் திடலும்
பெரியார் திடலும்
அசோகர் தூணும்
அவர்களுக்கு
வயிற்றில்
முச்சூடும்
புளியை கரைக்கின்றன .




அப்பா

எழுதப்படிக்க தெரியாத ஏழைதானே அப்பா
எத்தனை அக்கறை எங்களுக்கு எழுத்தறிவித்த அப்பா
தொழுது கிடந்த தொல்குடியின் துயரம் சுமந்த அப்பா
தோளுயர்த்தி நான்நடக்க தொண்டுசெய்த அப்பா
வீதியெலாம் சுத்தம் செய்து விருந்து படைத்த அப்பா
விளையாட்டாய் உன்னருமை மறந்திருந்தேன் அப்பா
ஒதி ஓதி படிக்க வைத்த உயர்ந்த மனது அப்பா
உன்னால்தான் இப்போதுநான் உயர்ந்த மனிதன் அப்பா
அரசுப் பணி முடித்தநொடி அடுத்து நீயும் உழைப்பாய்
ஆறுபிள்ளைகள் காப்பாற்ற அடிமைபோல உழைப்பாய்
கடுகளவும் பாசம் குறையா காவல்தெய்வம் அப்பா
கள்ளு சாராயம் பழக்கத்தினால்
கவலை சுமந்தேன் அப்பா
நெடுமரம் போல் உயர்ந்த உருவம்
நெசத்தில் குழந்தை அப்பா
நேர்மையிலே மாறாத நேசக்கார அப்பா
பாலுவென அழைக்கையிலே பயந்து நடுங்கி வருவேன்
பாசத்தோடு நீசிரிக்க பனிபோல குழைவேன்
ஆளுமட்டும் முரட்டு ஆளுநீதான் அப்பா
அன்பு துளியும் குறையாத அறிவன் நீதான் அப்பா
நான்வாழும் ஒவ்வொரு நொடியும் உன்னுழைப்பின் மிச்சம்
நானிந்த பூமியிலே உன்னுடைய எச்சம்
ஓடும் வரை ஓடி ஓடி உழைத்த தியாகி அப்பா
ஓய்ந்த பின்னே உனக்கொன்றும் செய்தறியேன் அப்பா
கூடுவிட்டு பறந்த குஞ்சுபறவை ஆனேன்
குழந்தைகளை வளர்த்தெடுத்தேன் உன்னைப்போல நானே
சார்ந்திருக்க கூடாதென சத்தியமாய் சொன்னாய்
சாகும் வரை அப்படித்தான் சரித்திரமாய் ஆனாய்
ஒருநொடியும் உனைமறந்து நானிருந்ததில்லை
உன்னுழைப்பை அசைபோட நான் மறந்ததில்லை
மறுபிறவி நம்பிக்கை எனக்கிருந்ததில்லை
மகனாக மீண்டும் பிறக்க மறுதலிக்கவில்லை
என் பிறந்த நாளுக்கு முதல்நாளில் மறைந்தாய்
விண் கலந்து வளிகலந்து காவல்தெய்வம் ஆனாய்
ஊணும் உயிரும் இருக்கும்வரை உனைமறக்க மாட்டேன்
உழைப்பின் தெய்வம் உன்னருளால்
உலகம் போற்ற வாழ்வேன்
நினைவி்ல் வாழும் அப்பா உன்னை வணங்குகின்றேன்
மனைவி மக்கள் சுற்றம் நட்பு
காக்க வேண்டுகின்றேன்





அம்மா

 பத்தியங்கள் நீயிருந்து 

பத்திரமா என்னைப் பெத்த அம்மா

வைத்தியரும் நீதானே அம்மா -என்னை
வளர்த்தெடுத்த தெய்வம் நீயே அம்மா!

கந்தசேலை உடுத்திடுவ
கஞ்சித்தண்ணி குடிச்சிடுவ
கறிசோறு எங்களுக்கு அம்மா நீ
கடன்பட்டும் போட்டுடுவ அம்மா

மூஞ்ச கழுவிவிட்டு
முகத்துக்கு பவுடரிட்டு
சாஞ்சி பாத்து சிரிச்சிடுவ அம்மா -எம்புள்ள
சாமிவரம் இன்னுசொல்வ அம்மா

அழக்கு சட்டை போட்டா
அடிக்க நீவருவ
அன்றாடம் துணிதுவைச்சு அம்மா -என்னை
அனுப்பி வைப்ப பள்ளிக்கூடம் அம்மா!

சத்தம் போட்டு நான் படிச்சா
சந்தோசம் பொங்கிவரும்
மொத்தமாக உன் முகத்தில் அம்மா -ஒரு
முழுநிலவு ஒளிபரவும் அம்மா !


சித்திரையில் நான் தூங்க சீலையால விசிறிடுவ!
மார்கழியின் குளிருக்கு மடிகொடுத்து தாங்கிடுவ !
கதகதப்பில் நான் வாழ்ந்தேன்! கைருசியில் நான் வளர்ந்தேன் !

அம்மா போல ஒரு தெய்வம் அகிலத்திலே இல்லை -அவர்
அன்பு பாசம் ஈடு செய்ய ஆண்டவனும் இல்லை

ஆயிரம் பிறைகண்டு ஆயுள்நீண்டு வாழ்ந்திடுக அம்மா!- உன்
அடிபோற்றி வணங்குகிறேன் அம்மா !















உழைக்கும் மகளிர்

விழிப்பு வந்து 

கால்போன போக்கில்
பயணம்
தொடர்கிறேன்
தன்வீட்டின்
வாயிலில் கூட தண்ணீர்
தெளிக்க முடியாமல்
ஏ. சியில் தூங்குபவர்களுக்காக
ஒரு வாளியும்
துடைப்பமுமாக
செல்கிறாள்
வெத்தலையை மென்ற படி
ஆண்டாளு அத்தை .
அவள் சென்றாள்தான்
பல வீடுகளுக்கு
குளிர்ச்சியும் சுத்தமும்
வரவேண்டும்
இரவெல்லாம்
காவல் காத்த நாய்கள்
அசந்து தூங்குகின்றன
அங்கொன்றும்
இங்கொன்றுமாக
ஆட்கள் நடமாட
மெயின் ரோடு வந்துவிடுகிறது
அங்கே
நாயர் கடையில்
இராசாத்தி உன்னை காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுகிறது .
சைக்கிள் ரிக்‌ஷா நாயகர்கள்
பஸ் டிரைவர் கண்டக்டர்
என
களைகட்டுகிறது டீக்கடை






சமூக (அ)நீதி

கொன்று குவிக்கிறது 
கொரோணா
கூடாதே என்றாலும்
கட்டுப்படாமல் அலைகிறார்கள்
சாலைகளில் கறிக்கும் ,மீனுக்கும்

டாஸ்மாக் கடைகளில்
முண்டியடித்துக்கொண்டு்
காசில்லாமல்
கொரோணாவை வாங்கி
வருகிறார்கள்

இந்த நிமிடம் மட்டுமே நிஜம்
நாளைக்கு உத்திரவாதமில்லையென
நன்றாக
உலகுக்கு உணர்த்தியிருக்கிறது கொரோணா

ஆனால்
பேண்ட சாதிகள்
சேரியில்
திருவிழா நடத்தியதை எதிர்த்து
கட்டப்பஞ்சாயத்து பேசி
காலில்விழ வைத்து
தங்கள் சாதித்திமிரை
நிலைநாட்டத் துடிக்கிறார்கள்

காலில் விழவைத்தவர்களை
கைதுசெய்யாமல்
பாதிக்கப்பட்டவர்களின் மீது
வழக்குப் பதிகிறது
சனாதன காவல்துறை
சமூகநீதி பேசும்
பெரியார் மண்ணில்

கேட்பதற்கு நாதியில்லாமல்
கேவலங்கள் தொடர்கிறது
சுயமரியாதை இல்லாதவர்களால்
இந்த அவலங்கள்
வேடிக்கைப் பார்க்கப்படுகிறது

உலகமே ஒன்று சேர அழைத்தாலும்
மானமும் அறிவும்
மனிதர்க்கு அழகு என்றாலும்
சகமனிதரை இழிவு செய்யும்
சாத்தன்களை கண்டும்
காணாமல் போவதுதான்
சமூகநீதியா ?

ஆட்சிகள் மாறினாலும்
காட்சிகள் மாறவில்லை