Sunday, August 22, 2010

மாற்றிக் காட்டுவோம்

மாற்றம் என்பதே மாறாத் தத்துவம்
மார்க்சிய அறிஞரின் மந்திர வாசகம்
ஏற்றம் பெற்றிட ஏழைகள் வாழ்வில்
ஏற்றுவோம் உரிமை விளக்கினை நாளும்
கூற்றுவன் நினைத்து குலைந்துப் போகாமல்
வேற்றுமைகள் போற்றி பிரிந்து நிற்காமல்
மாற்றிக் காட்டிட மானுட சமுத்திரம்
போற்றிக் காத்திட புறப்படுத் தோழனே

கேடுகள் சூழ்ந்தக் கீழ்மை உலகினைக்
கிளர்ச்சி செய்தே கீழ்மேல் புறட்டி
மேடுகள் பள்ளம் ஓர்மை யாக்கி
மேதினி எங்கும் பொதுமைப் புகுத்திக்
கோடுகள் அற்றக் கோளப் படத்தினைப்
கொண்டே உலகில் குடிகள் வாழ்ந்திட
பீடுடை பொதுமை உலகினை நாமும்
படைப்போம் வாரீர் பாரை நன்றாய்

Tuesday, August 17, 2010

உடல் தானம்

குருதிக் கொடையளிக்க
கூவி அழைத்தாலும்
கூப்பிட்டால் வருவோர் யார்
குமுகாய வீதிகளில்

உறுப்பு கொடையளிக்க
உற்றாரும் உறவுகளும்
விருப்போடு வருவதில்லை
வீணாச்சு பல உயிர்கள்

கண்ணப்பன் விழிக்கொடை
கர்ணனவன் குருதிக்கொடை
கர்மவீரன் ஜிதேந்திரன்
காட்டிய உடல்கொடை

வாழும் தலைமுறைக்கு
வழிகாட்டி சென்றபின்னும்
பாழும் மடமைகளால்
பார்த்திருத்தல் சரிதானா?

மூளை இறந்தபின்னே
முழு நிலமை புரிந்தபின்னே
ஆளை இழந்தபின்னே
அழுது புலம்புவதேன்?

மரங்கூட கிளைகொடுத்து
மண்ணில் பலமரங்கள்
வரமாக அளிக்கிறதே
வாழக் கற்றுக் கொள்வோம்

செயலிழந்த உடலுக்குள்
சாகாத உறுப்புகளை
இயலாத மாந்தருக்கு
எடுத்து வைத்தல் நலந்தானே?

செத்தபின்னே சிவலோகம்
செல்லுவதை யாரரிவார்
புத்தியுடன் உடல்கொடை
பூமிக்கே பெருங்கொடை