Tuesday, September 9, 2014

தமிழ்தான்வித்தடா!

அம்மா என்றிட ஆவும் மறந்ததா?
           ஆனைப் பிளிறிட அசிங்கப் பட்டதா
இம்மண் உயிர்கள் இயல்பாய் இருந்திட
           இன்னல் ஏனடா இன்தமிழ் பேசிட

வள்ளுவன் குறளுக்கு ஈடிணை உண்டா?
           நாலடியார் போல் நன்னூலும்  உண்டா?
அவ்வைப் பொன்மொழி அகிலத்தில் உண்டா?
          அட்டா! பொன்னை மண்ணாய் நினைத்தாய்

சங்கத் தமிழ்போல் வாழ்க்கை இலக்கியம்
        சல்லடை போட்டு துழவிணும் கிட்டுமோ?
தெங்கின் இனிமைப் பாக்களால் கம்பன்
        தேனாய் வடித்த காவியம் கிட்டுமோ?

அகமும் புறமும் அரிய சொத்தடா!
         அனைத்து மொழிக்கும் தமிழ்தான் வித்தடா!
சிகரம் தொட்டதுன் சீரிளமை மொழியடா!
         சிந்தித்துப் பாரடா! செயலினில் இறங்கடா!

அடிமைப்  புத்தியை அறவே ஒழியடா!
        அன்னைத் தமிழினில் அனைத்தும் செய்யடா!
மிடுக்குடன் தமிழை கைகளில் ஏந்தடா!
        மீண்டும் தமிழை அரியணை ஏற்றடா!