Saturday, December 25, 2010

சேவகர்

திடீரென்று தெருக்களில்
சமூக சேவகர்கள்
படையெடுக்கின்றார்கள்.

குப்பைகளை அள்ளுகிறார்கள்
குழந்தைகளைக் குளிக்கவைக்கிறார்கள்
தொப்பைகளைத் தூக்கிக்கொண்டும்
தெருத்தெருவாக நடக்கிறார்கள்

மகளிர் குழுக்களுக்கு
மாமன்கள் போல
புடவைகள் கொடுத்து
போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள்.

ஒரு கிலோ
சர்க்கரைக் கொடுத்து
ஒரே நாளில்
ச.ம.உ ஆகிடத் துடிக்கிறார்கள்.

பொதுநல விரும்பிகளாக
பொழுதெலாம் காட்டிக்கொண்டு
அறுவடை செய்திட
அடுத்த தேர்தலை எதிர்நோக்குகிறார்கள்.

மரண வீடுகளில்
மாலைகளோடு வந்து
அழுபவர்களிடத்திலும்
ஆதரவு திரட்டுகிறார்கள்.

தேர்தல் முடிந்துவிட்டல்
திரும்பிப் பார்க்காமல்
நான்காண்டு காலம்
காணாமல் போவார்கள்.

சமூக சேவகர்கள்
நடிப்பையே மூலதனமாக்கி
நாட்டு மக்களை
மொட்டையடிப்பார்கள்.

முடி வளரும்
என்ற நம்பிக்கையிலேயே
நன்றாக மறுபடி மறுபடி
தலையை நீட்டும் பொதுமக்கள்