Monday, July 21, 2014

கடமை

என்ன  நடந்தாலும்  ஏனென்று கேட்காமல்
மண்ணை மொழியை மறந்து கிடக்கின்றார்
திண்ணை உறக்கத்தில் தீந்தமிழ் மாந்தர்கள்
என்னே கொடுமை இது

பாவலர்கள் பாட்டினிலே பாசாங்கு பம்மாத்து
நாவலர்கள் பேச்சினிலே நாளெல்லாம் மாய்மாலம்
காவலர்கள் காட்டாட்சி காடுமலை ஆறுகொள்ளை
ஈவிரக்கம் இல்லையே இங்கு

வீதியிலே வன்முறை வெறியாட்டம் நாட்டினிலே
நாதியில்லை கேட்பதற்குச் சேதிகளை ஏட்டினிலே
ஊதிப் பெருக்கிடவே ஊரிலுள்ள ஊடகங்கள்
நீதியின்றி நிற்கின்ற தேன்

நீதிநூல் தாம்கற்றும் நிம்மதியாய்  வாழவழி
ஏதிங்கே தோழா இளைஞர்கள் வன்முறையில்
மோதி கொலையுண்டு வன்புணர்வில் மங்கையரை
ஊதி எரிக்கின்றார் ஊர்

நாட்டில் நடக்கின்ற காட்சிகளைக் காணுங்கால்
ஏட்டில் எழுதவொண்ணா ஏக்கம் விரிகிறது
போட்டிக்குப் போட்டியாய்ப் பொதுமக்கள் பொய்யணிந்து
நாட்டில் நடக்கின்றார் நன்கு

அவரவர் தங்கடமை ஆற்றுதற்கு இந்நாட்டில்
தவறாதுசட்டங்கள் தாள்களில் இருக்க
எவரும் ஏற்றிடவே எப்போதும் கேளாத்
தவறும் தடியரைத் திருத்து

Sunday, July 6, 2014

இந்தி(யா)?



ஆட்சி மாற்றம் நடந்த பின்னே
              அனைத்து விலையும் ஏறுது
ஆளும் கட்சி எதிரி கட்சி
              அடுக்காய் குற்றம் சாட்டுது
காட்சி மாறி கைகள் மாறி
               கவலைத் தீர வழியிலை
காட்டு தர்பார் ஆட்சி நாட்டில்
              கந்தல் மாந்தர் உய்விலை

மானியம் இல்லை என்று சொல்லி
                   மன்றில் பேசி திரியுது
மாந்தர் வாழ வழியே இல்லை
             மார்பை உயர்த்திக் காட்டுது
தானியம் விளைய தண்ணீர் இல்லை
             தாவா தீர்க்க முடியல
தான்தான் என்று தலையை தூக்கி
            ததிங்கி னத்தோம் பாடுது

மதப்பேய் பிடித்த காவிக் கூட்டம்
           மாநிலம் பிடிக்க அலையுது
மாயா ஜால வித்தை காட்டி
            மக்களை நெருங்கத் துடிக்குது
இதமாய்ப் பேசி இலவயம் நீக்கி
             ஏழைகள் வயிற்றில் அடிக்குது
இந்தியைத் திணிக்க இயன்ற வரையில்
             இறங்கி வேலைச் செய்குது

மாற்றம் வேண்டி ஓட்டு போட்டோர்
             மடியில் கையை வைக்குது
மன்னர் அம்பானி கைப்பா வையாய்
             மோடி அரசு கிடக்குது
ஏற்றம் வேண்டி ஏழை மக்கள்
          ஏற்றுக் கொண்டார் உங்களை
ஏழைக் கண்ணீர் எரிக்கும் நாளை
          எழுக  உணர்ந்து நடந்திட