Friday, April 30, 2010

மே நாள்

இத்தரை மீதினில் எத்தனைத் தோழர்கள்
நித்தமும் உழைத்து நிலத்தினைத் திருத்தினர்
கொத்தடி மையாக கூலியா ளாக
அத்தனை வலியும் தாங்கிக் கிடந்தனர்

சிகாகோ நகரில் சேர்ந்த தொழிலாளர்
சிந்தித்து பேசி சீரிய முடிவினை
சிகரமாய் எடுத்தனர்;சிவப்புக் கொடியினை
சேர்ந்து பிடித்தனர்; ஓங்கி முழங்கினர்

கூழுக்கும் கூலிக்கும் கூவி அழுவதா?
கூனராய் எப்போதும் குனிந்தே கிடப்பதா?
வேலிக்குள் அடைபட்ட விலங்கெனக் கிடப்பதா?
வேழமே எழுந்துவா விலங்கை ஒடித்துவா

ஆலைக்குள் அகப்பட்டு ஆவியை விடுவதா?
ஆளுக்கு ஆள்மிரட்ட அடிபணிந்து வீழ்வதா?
சோலைக்குள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க
வேலைக்குள் வருவாய் விழிப்பாக இருப்பாய்

எட்டுமணி நேரவேலை எம்தோழர் வென்றநாளை
கொட்டிக் கொட்டி எல்லோரும் கூட்டமாய்
பட்டி தொட்டி எல்லாமும் பாடிக் களிப்போமே
தட்டித் தட்டிக் கைசேர்த்து தாளமிடுவோமே

ஆண்களும் பெண்களும் அணிதி ரள்வோமே
ஆனந்தக் கும்மி யடித்து மகிழ்வோமே
ஆனவ முதலாளிக் கொட்டத்தை யடக்க
பூணுவோம் உறுதி பாடிவா தோழனே

சேர்ந்துவா தோழனே செகத்தினை மாற்றுவோம்
செம்மார்ந்து தொழிலாளர் செருக்கினைப் போற்றுவோம்
ஆர்த்துவா தோழனே அணிவகுத்து செல்லுவோம்
ஆயிரம் தடைதகர்த்து மேநாள் போற்றுவோம்

Thursday, April 29, 2010

புரட்சிக்கவி

பாவேந்தன் பாட்டென்றால் அனல்பறக்கும்
பழமூட வழக்கங்கள் அழிந்தொழியும்
கூவுகின்ற குயில்பாட்டும் புரட்சியாகும்
குத்தீட்டிக் கவிதைகள் குவிந்திருக்கும்

ஆரியத்தை அழித்தொழிக்க அடியெடுத்தார்
ஆட்சிமொழி தமிழாகத் தடியெடுத்தார்
ஓரிடத்தில் குட்டையெனத் தேங்காமல்
ஊருலகம் பாட்டாலே சென்றடைந்தார்
யாரிடத்தில் உரைத்தாலும் அவர்பாட்டை
ஊறிவரும் உணர்வுவீச்சு கண்டிருப்பீர்
சூரியனாய் சுட்டெரிப்பார் கொடுவழக்கம்
சுத்ததமிழ் வீரர்பா வேந்தர்தான்

தமிழுக்கு எதிராக எவரேனும்
தம்கருத்தை வெளியிட்டால் கொதித்தெழுந்து
துமிக்கியென வெடித்திடுவார்; பாவேந்தர்
தூள்தூளாய் ஆக்கிடுவார் தமிழ்பகையை
இமியளவும் ஈரமிலா நெஞ்சத்தாரை
இழுத்துவந்து தெருவினிலேப் போட்டுதைப்பார்
தமிழ்த்தெருவில் தமிழ்க்கடையில் பெயர்ப்பலகை
தமிழிலேயே வைத்துவிட ஆனையிட்டார்

பொதுவுடைமை பகுத்தறிவுப் போர்வாளாய்
புதுவுலகம் படைக்கின்றப் புரட்சியாளன்
வதுவையர் உயர்த்துகின்ற காவியங்கள்
வழங்கியவன் வணங்காத பாட்டுவேந்தன்
முதுதமிழை மூச்சாகப் போற்றியவன்
மூடராக இருந்தவரை மாற்றியவன்
எதுவரினும் தன்கருத்தை நிறுவியவன்
ஏற்றமிகு கவிச்சித்தன் பாவேந்தன்

Saturday, April 10, 2010

மகளிர் இட ஒதுக்கீடு

உன்னில் பாதி பெண்மையடா
ஒதுக்கல் என்ன நீதியடா
எண்ணம் முழுதும் ஆதிக்கம்
ஏய்த்தாய் பெண்ணைப் போதுமடா
என்னக் கொடுமை ஆடவரே
இன்னும் மசோதாக் கலந்தாய்வு -ஒருக்
கண்ணில் வெண்ணெய் சுண்ணாம்பு
கதையாய் இன்னும் தொடருவதா?

சரிபாதி உரிமை உடையவளை
சனாதனம் பேசி ஒடுக்குவதா?
மரியாதை தானா மகளிரையே
மட்டம் தட்டிப் பேசுவது
உரிய இடத்தை மகளிருக்கு
உடனே வழங்கல் கடமையடா
சரியாய் சொல்வீர் பெண்ணுரிமை
இனாமா? இல்லை வாழ்வுரிமை

அச்சம் நாணம் தூக்கியெறி
அடிமைத் தளையை உடைத்தெறி
மிச்சம் மீதி உண்ணல் ஒழி
மீட்டு உரிமை நாட்டிவிடு
அச்சன் கணவன் வல்லாண்மை
அடங்க மறுத்து அத்துமீறு
பிச்சைய யல்ல ஒதுக்கீடு
பெண்ணே எதற்கு கூப்பாடு?

கொடையாய் மென்மை பெற்றவளே
கொடுமை எதிர்க்க வா வெளியே
நடையில் அன்னம் ஆனாலும்
நாட்டு உனது பிறப்புரிமை

Tuesday, April 6, 2010

செம்மண் குட்டை

வடக்கே ஆறுகளில் வெள்ளம்
வறட்சியில் வாடும் தெற்கு வாழ்ந்திட
மறுத்திடும் வடவர் உள்ளம்