Sunday, March 11, 2012

பரம்பரைப் பாத்திரம்

நான்கு பிள்ளைகளோடு
நலம் பாராட்ட முடியாதவன்
நான் தான் தலைவனென்று
நன்றாக நடிக்கிறான்.

வீண் புரளி செய்து
விழாக்களைக் கெடுக்கிறான்

பாட்டிமார் கதைகளைப்
பதிவுகளும் செய்கிறான்

'தான்' தான்
கோயில்கள் கட்டியதாகவும்
குளங்கள் வெட்டியதாகவும்
கூசாமல் சொல்கிறான்

அப்பாவின் புகழினில்
அவன் பிழைத்த போதிலும்
தப்பாமல் பிள்ளையும்
தாத்தாவின் வாரிசென்று
தண்டோரா போடுறான்

எங்களைக் கலக்காமல்
எவனும் கூடக் கூடாதென்று
தங்களின் வீட்டருகே
தட்டிகள் வைக்கிறான்

அரங்கத்தில் வந்ததும்
அனைவரும் எழுந்துநிற்க
ஆள்வைத்துச் சொல்கிறான்


மேடையில் தலைமையேற்க
மேல்துண்டை சரிசெய்து
பாடையிலும் பிணமாக
பாவணைகள் செய்கிறான்

பின்பாட்டைக் கூடப்
பிதற்றத் தெரியாதவன்
ராஜபார்ட் கட்டிட
ரகளைகள் செய்கிறான்

எந்த விழா எடுத்தால்
எவ்வளவுத் தேறுமென்ற
விந்தை அறிந்ததால்
சொந்த செலவின்றி
சொற்பந்தல் மூலதனத்த்தில்
சுருட்டியும் கொள்கிறான்.

பரம்பரைப் பேரும்
பந்தாவும் இருப்பதால்
வரும்படி பார்த்தலே
வாடிக்கையானது.

அத்தனை அசிங்கமும்
அறிந்தே பலரிங்கே
புத்தனாய் அவனைப் போற்றி
புலால் சோறு படைக்கின்றார்

நின்று
நிழற்படம் எடுத்துக் கொண்டு
மென்று விழுங்குகின்றார்
மிருகமாய் மலத்தினை

பொய்முகம் கிழிக்க
புறப்படும் இளம்படை
மெய்யிது மெய்யிது
மெல்ல அழியும் கறை.

Saturday, March 10, 2012

மகளிரைப் போற்று

படைப்பினில் பலவகைப் பிரிவுகள் நன்றாய்
அட 'நீ' மட்டுமே பகுத்தறிவுப் பெற்றாய்
ஆறாம் அறிவை அடகும் வைத்தாய்
வேறாய் மகளிரை விலக்கியே வைத்தாய்
படைப்பு என்ன வெளியேறும் கழிவா?
இடை சிறுத்தவர் இழிந்த பிறவியா?
நடைப் பிணமா பெண்டிர்? நன்றா உனக்கு?
தடையேன் உனக்குள் தயக்கம் விலக்கு!

மட்டம் தட்டியே மார்தட்டும் மனிதா!
சட்டம் வகுத்தும் சறுக்குதல் சரியா?
மாடாய் அவளும் வேலைகள் செய்வாள்
ஓடாய் தேய்ந்தும் உனக்கே உழைப்பாள்
உனக்குக் கீழ்தான் அவளென்ற போக்கு
நனவிலி மனத்திடை நண்பா நீக்கு!
தாய்வழிச் சமூகம் தான்நம் மரபு
தாய்மைப் பழித்து ஏனடா கரவு?

அரிதாய்க் கிடைத்த அற்புதப் பிறவியில்
பரிசாய் மகளிர் பாதிநம் வாழ்வில்
உரிமைகள் கேட்டு உண்ணா நிலையெனில்
சிரிக்காதா இயற்கை சிந்தனைச் செய்வாய்
அவரின் பங்கை அவர்கள் அடைந்திட
தவணை ஏனடா?தரித்திரம் சுமந்திட
மகளிர் உரிமை மகளிர் அடைய தடையாய்
மகனே இனிநீ இருந்தால் உடைவாய் மண்டை