Sunday, July 24, 2011

மலையரசி

கொடைக்கானல் மலையரசி குளிர்ச்சித் தருகிறாள்-எங்கள்
குழந்தை மனத்தை மறுபடியும் மலர்ச்சி செய்கிறாள்
அடைமழையாய் பெய்து எம்மை அலைக்கழிக்காமல்
அன்புக்குளிர் அரவணைப்பில் அகமகிழ்கிறாள்
உடைநூறு உடலுக்கு உடுத்திக் கொள்ளாமல்
உள்ளம் மகிழ உணர்ந்து நெகிழு உதவிசெய்கிறாள்

வானளவு உயர்ந்து நிற்கும் மரங்களினாலே
வருடம் முழுதும் மழைபெய்து வளமை சேர்க்கிறாள்
ஆனமட்டும் மனிதன் சேர்க்கும் கழிவுகளாலே
அவளுந்தான் கற்பிழந்து கலங்கமடைகிறாள்

கோணல்புத்தி மனிதர்களே கொஞ்சம் நில்லுங்கள்
கோடைக்கானல் குமரிகற்பை சூரையாடாதீர்
மோன நிலையில் நிற்கும் மரங்கள் சாட்சியல்லவா?-அவை
முழுதும் நம்மைக் காக்கின்ற காட்சியல்லவா?

நகரக்கழிவு பொருட்கள் எதற்கு நாசமாக்கவா?-இயற்கை
நமக்களித்த பொக்கிஷத்தை மோசமாக்கவா?
அகரமுதல அறிந்தபின்னும் அறிவில்லையா?-அன்னை
அடிமடியில் கைவைத்தல் அழிவில்லையா?

மலையும் காடும் மனிதயினத்தின் சொத்தல்லவா-அவை
மலரும் புதிய சந்ததிக்கும் வித்தல்லவா?
குலையும் நடுங்கக் குழிபறித்தால் மண்பொறுக்குமா?-மலை
குடைசாய்ந்தால் என்னவாகும் ஊர்பிழைக்குமா?

உயர்ந்த மலைச்சிகர அரசி மடியினைக் காப்போம்
உயிர்கள் வாழ சூழல்காத்து உண்மையாய் இருப்போம்
அயர்ந்து அழிவைச் செய்யும்வேலை அடியோடு மறப்போம்
அழகுக் கொடைக்கானல் மலைக்கு ஆரத்தி எடுப்போம்

Saturday, July 9, 2011

மாபெரும் சபைதனில் நீ நடந்தால்....

ஆயிரங் கோடிப் பணமிருந்தாலும்
ஆறுதல் அடைவதில்லை-மனிதன்
ஆலய மாயிரம் சென்று வந்தாலும்
ஆசைகள் விடுவதில்லை

நோயினில் நொந்துப் படுத்திருந்தாலும்
நாயாய் அலைகின்றான்-பணத்தை
ஆயிர மாயிரம் தவறுகள் செய்தும்
குவித்திடத் துடிக்கின்றான்

ஊருக்கு உழைத்திடும் எண்ணமில்லாமல்
உறவுக்குச் சேர்க்கின்றான்-என்றும்
பாருக்குள் பெரியப் பணக்காரனாகவே
பாவங்கள் செய்கின்றான்

காரும் பணமும் பங்களா சுகமும்
கண்டிடத் துடிக்கின்றான்-மேலும்
ஆறும் காடும் மலையும் சுருட்டிட
ஆலாய்ப் பறக்கின்றான்

யாரும் பார்க்க வில்லையென்றே
எதுவும் செய்கின்றான்-நல்ல
சீரும் சிறப்பும் நிறையும் வாழ்வை
சீக்காய் மாற்றுகின்றான்

உலக நடப்பை உணர்ந்தே வாநீ
உருப்பட என் தோழா -நாட்டில்
கலகம் செய்தேனும் காரிருள் விரட்ட
கைகோர்த்து வா தோழா

நிலவும் சாதி சமயவெறி எரித்திட
நீ வா என் தோழா-மண்ணில்
உலவும் கயவர் உயிரைக் குடித்திட
உணர்வோடு வா தோழா

செய்யும் செயல்களால் சீரிய மன்றம்
சிறப்புகள் செய வேண்டும்-உந்தன்
உய்யும் உழைப்பால் உலகமே உன்னை
உயர்வுகள் செய வேண்டும்

மெய்யன்பு நிறைந்த மேன்மை பணியால்
மேடைகள் உனைப் பாடும்-உன்
கையும் கருத்தும் கறைபடாதிருந்தால்
காலம் உனைப் போற்றும்

சொந்தம் மறந்து சுயநலம் துறந்தால்
சூழல் உனைப் புகழும்-உலகின்
எந்தச் சபைதனில் நீ நடந்தாலும்
ஏற்றம் உனைப் பணியும்