Wednesday, November 24, 2010

பெருவலி

எழுதிட நாளும் நினைக்கிறேன்
எதையோ எழுதிக் குவிக்கிறேன்
முழுவதும் கவிதை என்றிட
முடியாமல் நானும் தவிக்கிறேன்
பழுதிலாப் பாடல் படைத்திட
பலமுறைக் காகிதம் கிழிக்கிறேன்
வழுவிலா வாழ்க்கை அமைந்திட
வரிகளில் கருத்தை படைக்கிறேன்

படித்திடப் புத்தகம் திறக்கிறேன்
பார்த்து வேர்த்து மலைக்கிறேன்
வடித்திடக் கவிதை நினைக்கிறேன்
வாய்க்கும் நெஞ்சுக்கும் நடிக்கிறேன்
துடித்திடும் நெஞ்சின் வலிகளை
தும்பைப் பூதாள் இறக்கிட
படித்திடும் வாசகர் அடைந்திட
பக்குவம் தெரியாமல் விழிக்கிறேன்

புவியுடை பொறுமை இல்லாமல்
புதுப்புது முயற்சிகள் செய்கிறேன்
எதுவென கவிதைப் புரிபட
இதுநாள் வரையினில் முயல்கிறேன்
புவியினைப் புரட்டிய புலவரே
புதுமைப் பூக்கும் முத்தமிழே
கவிதை எழுதிடக் கைகொடு
காலம் நிலைத்திட மடிகொடு

Monday, November 8, 2010

புதுவையில் பாரதி

எட்டய புரத்தினில் எழுந்த நெருப்பவன்
எங்கள் கவிபாரதி
கிட்டிய வரமென கீர்த்திப் பெரிதென
கிடைத்த நவபாரதி
தொட்டில் குழவியும் தூயப் பெரியோரும்
தோழமைக் கொண்டிடுவார்
கட்டிய வேட்டியும் காலில் சப்பாத்தும்
கண்டவர் மெய்சிலிர்ப்பார்

புதுவையில் தங்கியப் புரட்சி நெருப்பவன்
புதுமை பலபடைத்தான்
இதுவரை எழுதாத இறவாத இலக்கியம்
இங்கேதான் படைத்தான்
வதுவையர் உரிமைக்கு பாஞ்சாலி சபதம்
வார்த்து எழுதிவைத்தான்
புதுமையாய்க் குயில்பாட்டு புரட்சியை இங்குதான்
புடம்போட்டு பாடிவைத்தான்

மணக்குள விநாயகர் மாண்புகள் போற்றியே
மகத்தான பாடல் படைத்தான்
கணக்கின்றி கவிதைகள் கண்ணன் மேல்பாடி
காதலை எடுத்துரைத்தான்
உணர்வோடு குயில்தோப்பில் உலாவந்தவன்
உட்பொருள் புரியவைத்தான்
உணவுக்கு வைத்தரிசி உற்சாகப் படையலிட்டு
உறவாக காக்கை நினைத்தான்

அதிகாலைப் பொழுதினில் அலைகடல் மணலில்
ஆனந்தமாய் நடப்பான்
உதிக்கின்ற சீரியன் மறைகின்ற காட்சியும்
உணர்வோடு கண்டுகளிப்பான்
நிதியில்லை என்றாலும் நெஞ்சினை நிமிர்த்தியே
நித்தமும் நடைபயில்வான்
நதிபோலே எப்போதும் தடைதாண்டி தம்பயணம்
நன்றாக தொடர்ந்துசெல்வான்

பாரதி வந்ததால் பழையன கழிந்துமே
புதுச்சேரி யானதிங்கே
பாரதி வாழ்ந்ததால் பாரத தேசமே
பார்வையைத் திருப்பியது
பாரதி காட்டிய புதுநெறிப் பாவலர்
பாட்டையை மாற்றியது
பாரதி ஓட்டிய 'பா'ரதம் புதுமைக்குப்
பாடமாய் ஆனதிங்கே

பாரதிக் கழற்றி கனகலிங்கம் ஏற்றிப்
பூணூலைப் புனிதமாக்கினான்
பாரதி பூனைப் பாட்டாலே ஒற்றுமை
பாரினில் வழிகாட்டினான்
பாரதி புதுமைக்கு புதுவையே முதற்களம்
பாடுவோம் தோழர்களே
பாரதிக் காப்பென்று பல்லாண்டு பாடுவோம்
பாடுவோம் வாருங்களேன்