Tuesday, December 7, 2021

ஆறாம் விரல்

 


ஆடுகளாய் சாய்ந்த மக்களெல்லாம்
அறிவைப் பெற்றனர் எழுத்தாலே
மேடு பள்ளங்கள் சமமாச்சு
மேல்கீழ் நிலைமைகள் சரியாச்சு
நாடுகள் சமைந்தன எழுத்தாலே
நன்மைகள் விளைந்தன எழுத்தாலே
கோடுகள் கலைந்தன எழுத்தாலே
கோட்டைகள் தகர்ந்தன எழுத்தாலே 

ஆறாம் விரலாம் எழுதுகோலால்
அத்தனை அரசையும் பெயர்த்தெடுத்தார்
கோரமுகங்களை இனங்காட்டி
கொள்கை முழக்கங்கள் தான்தீட்டி
நேராய் சமூகத்தை திசைதிருப்பி
நிமிர்த்திய நெம்புகோல் எழுதுகோல்கள்
பாராய் வரலாறு முழுவதிலும்
பாட்டை போட்டன எழுதுகோல்கள்

எழுதுகோல் ஆயுதம் என்றறிந்து
எதேச்ச திகாரர்கள் பயந்தார்கள்
எழுத்தாளர் அறிஞர்கள் அழித்தொழிக்க
எத்தனை சூழ்ச்சிகள் செய்தார்கள்
அச்சத்தை துறந்து அறிஞரெலாம்
ஆறாம் விரல் கொண்டு எதிர்த்தார்கள்
துச்சமென தூக்கி எறிந்தார்கள்
தூவல் புரட்சி படைத்தார்கள்











No comments: