Thursday, May 20, 2021

அம்மா

 பத்தியங்கள் நீயிருந்து 

பத்திரமா என்னைப் பெத்த அம்மா

வைத்தியரும் நீதானே அம்மா -என்னை
வளர்த்தெடுத்த தெய்வம் நீயே அம்மா!

கந்தசேலை உடுத்திடுவ
கஞ்சித்தண்ணி குடிச்சிடுவ
கறிசோறு எங்களுக்கு அம்மா நீ
கடன்பட்டும் போட்டுடுவ அம்மா

மூஞ்ச கழுவிவிட்டு
முகத்துக்கு பவுடரிட்டு
சாஞ்சி பாத்து சிரிச்சிடுவ அம்மா -எம்புள்ள
சாமிவரம் இன்னுசொல்வ அம்மா

அழக்கு சட்டை போட்டா
அடிக்க நீவருவ
அன்றாடம் துணிதுவைச்சு அம்மா -என்னை
அனுப்பி வைப்ப பள்ளிக்கூடம் அம்மா!

சத்தம் போட்டு நான் படிச்சா
சந்தோசம் பொங்கிவரும்
மொத்தமாக உன் முகத்தில் அம்மா -ஒரு
முழுநிலவு ஒளிபரவும் அம்மா !


சித்திரையில் நான் தூங்க சீலையால விசிறிடுவ!
மார்கழியின் குளிருக்கு மடிகொடுத்து தாங்கிடுவ !
கதகதப்பில் நான் வாழ்ந்தேன்! கைருசியில் நான் வளர்ந்தேன் !

அம்மா போல ஒரு தெய்வம் அகிலத்திலே இல்லை -அவர்
அன்பு பாசம் ஈடு செய்ய ஆண்டவனும் இல்லை

ஆயிரம் பிறைகண்டு ஆயுள்நீண்டு வாழ்ந்திடுக அம்மா!- உன்
அடிபோற்றி வணங்குகிறேன் அம்மா !















No comments: