Thursday, July 29, 2010

செம்மொழி

பிறந்த பெருமையினை
மறந்த தமிழர்களும்
சிறந்து வளர்ந்த தமிழ்
செம்மொழியாய் ஆனதென்று
செம்மார்ந்து நிற்க்கின்றார்.

வழக்கொழிந்த வரிசையிலே
வண்டமிழை நிறுத்துதற்கு
கழைக் கூத்தாடி போல
காட்சிகளை நடத்துகின்றார்.

பிள்ளைமொழி தமிழில்லை
பேச்சுமொழி தமிழில்லை
பள்ளியிலே தமிழில்லை
பல்லிளித்தே புகழுகின்றார்

இருப்பதைக் காப்பதற்கே
இயலாத ஈனர்கள்
பெருக்குவதாய் புளுகுமூட்டை
பேணர்கள் வைக்கின்றார்.

நெருக்கடிகள் வந்தால்தான்
நினைக்கின்றார் தாய்மொழியை
செருப்படிகள் பட்டபின்பே
செந்தமிழை சீண்டுகின்றார்

வருவோன் போவோன் எல்லாம்
வாய்கிழியப் பேசுகின்றான்
வருவாயை சுருட்டிடவே
வாழ்க தமிழ் என்கின்றான்

யாரென்ன செய்தாலும்
எந்நாளும் இளமையுடன்
எந்தமிழும் விளங்கிடுமே
எதிரிகளை இனங்காண்போம்