Friday, April 24, 2009

பாடல்

கடைசித் தமிழனும் குண்டினில் மாண்டு
காடையர் களிப்பில் திளைத்திடும் நாளை
விடையாய் பார்க்க விரும்பிடும் தமிழா
உனையே காலம் உயிராய் விடாது
படையில் சேர்ந்து மாண்டிட வேண்டாம்
பாவம் பாரத்தும் அழுதிட வேண்டாம்
தடையாய் இராது தள்ளியே இருந்திடு
தனித்தமிழ் ஈழம் தானாய் மலரும்

ஈழம்

நாதியற்ற இனமாக ஆகிடுமோ
நாளையிந்த இழிநிலையும் மாறிடுமோ
ஆதிமக்கள் அடிமைநிலை நீண்டிடுமோ
ஆண்டயினம் அழிந்தொழிந்து போயிடுமோ
போதிமரப் புத்தமதம் புரிந்திடுமா
போர்முனையில் அமைதிவர நடந்திடுமா
நீதிநெறி நிலைபெற்று நின்றிடுமா
நிம்மதியாய் வாழ்ந்திடவே முடிந்திடுமா

கைகட்டி நிற்கிறதே உலகநாடு
கரைபட்டு போனதுவே மனிதநேயம்
மைவித்தை செய்கிறதே பாரதமும்
மனசாட்சி இழந்ததுவே இலங்கையுமே
தையென்று குதிக்கிறதே சிங்களமும்
தலைவெட்டி சாய்க்கிறதே தம்மக்கள்
வையகமே வானகமே வன்கொடுமை
வாய்திறந்து மௌனியாக இருப்பதேனோ?

எம்மக்கள் சிந்தியரத் தம்யாவும்
எருவாக இன்னொருநாள் உருவாகும்
தம்மக்கள் தலையெடுத்த தருக்கர்தம்
தலையெழுத்தை தண்டணையால் முடிப்பார்கள்
சும்மாவே சொரனையின்றி சோம்பலாக
சுற்றிவர மாட்டாரே எம்மிளைஞர்
பம்மாத்து காட்டுவோரை படைகொண்டு
பாடையிலே ஏற்றியே ஓய்வார்கள்

Wednesday, April 8, 2009

தாழ்வுற்றுக் கிடப்பதுவா நாடு
தமிழாநீ தலைநிமிர்வை நாடு
தன்மானம் காத்திடவே
தன்னலத்தை உதறிவிட்டு
ஆழ்மனத்தில் தமிழுணர்வைப் பாடு
வாக்குப்பெட்டி மட்டுந்தான் குறிக்கோளா
வண்டமிழர் பரம்பரையே நரியாடா
தூக்குமரம் ஈர்த்துன்னை கொல்லாதா
தூரத்து தேசத்தில் எறியாதா
கேக்குவெட்டி கொண்டாட்டம் ஒருகேடா
கேப்பையிலே நெய்வடிதல் அறிவாடா
சாக்குச்சொல்லி வாக்குகேட்கும் சதிகாரா
சாவும்மை முத்தமிட்டு சாய்க்காதா

நீக்குப்போக்கு மட்டுந்தான் வாழ்வாடா
நீமட்டும் வாழத்தான் நிலமாடா
கோக்குபெப்சி குடிக்கத்தான் குடலாடா
கோலிசோடா கலரழித்தாய் சுதேசியாடா
தேக்குமர உடலுனக்குத் தேவையாடா
தேடிநிதம் சோறுண்டாய் தேறுவாயா
பாக்குவைத்து படைக்கழைக்க வேணுமாடா
பண்டைவீரம் பேசுவதே பிழைப்பாடா

வாக்களிக்க வரிசைநிற்கும் என்தோழா
வாடிநிற்கும் ஈழமக்கள் நிலையறிவாய்
காக்கவரும் கட்சிக்கே வாக்களிப்பாய்
காடையரை இனங்கண்டு களையெடுப்பாய்

பக்தி

முன்பைவிடவும்
இப்போது
பக்தி முற்றியிருப்பதாய்
அனைவருமே அங்கலாய்க்கிறார்கள்.

கோவில்கள் பெருகிவிட்டன
கூட்டம் நிரம்பி வழிகிறது
புதுப்புது வழிபாடுகள்
புற்றீசலாய் படையெடுக்கின்றன

ஒரு நாளும்
மனிதன்
தன்
சுயத்தோடு செயல்படுவதில்லை.

வாஸ்த்து
எண்கணிதம்
சோதிடம் என
அனைத்தும்
அவன் மூளையை
மழுங்கடித்து மண்ணாக்க்குகின்றன.

புண்ணாக்கு போலவே
அவன்
பொழுதெலாம் கிடக்கின்றான்

தன்னால் முடியும்
என்பதையே
அவனால்
நம்பமுடியவில்லை.

எல்லாம் அவன் செயல்
என்றே
தன் சுயத்தை இழக்கிறான்.

முன் பிறவி
வினையென்றே
தன் வினையைத்
தள்ளிப்போடுகின்றான்.

ஏழைகளுக்கு இரங்காமல்
ஏழு ஜென்மத்துக்கும்
ஏழுமலையானுக்கும்
சொத்து சேர்க்கின்றான்.

கோவில்கள் கட்டி
கூட்டம் சேர்ந்ததும்
நல்ல விலைக்கு விற்று
நகர்ந்துச் செல்கிறான்

அடுத்த ஊரில்
அதைவிடப் பெரிய
கோவிலுக்கு அடிக்கல் நாட்ட.

மனிதன் மீது
அன்பு செலுத்தாமல்்
மதங்களின் மேல்
வெறிகொண்டு அலைகிறான்.

உயிரிரக்கம் ஒன்றே
உலகில் தேவை என்பதை
உணராத பக்தியால்
முக்தியடைந்தும் ஏது பயன்?



Tuesday, April 7, 2009

ஏன்

எதையோ எழுதத் துடிக்கிறேன்
என் பேனா என்னையும் அறியாமல்
என்
கை விரல்களின் துணையோடு
கண்டதையும் களமிறக்கிச் செல்கிறது
நான்
என்செய்வது
மூளையும் புலன்களும்
முட்டிக்கொள்ளாதவரை
நல்லபடிதான்
எல்லாம் நடக்கின்றன.
வெவ்வேறு திசைகளில்
எண்ணங்கள்
விரியும் வேளையில்
இவ்வாறு நடக்குமா
எனும்
கேள்விகளே
மிஞ்சுகின்றன.

தேர்தல்

ஐந்தாண்டுக்கு ஒருமுறை
அல்லது
இடையிலும் வரும்
நம்
அரசியல் வாதிகளின்
ஆசைக்கேற்ப

சனநாயகத்தின்
சாட்சியாய் நின்று
சந்தி சிரிக்கும் சர்க்கஸ்.

கொள்கைகளும் கோட்பாடுகளும்
கோவணாண்டிகளுக்கு மட்டுமே
குத்தகை.

பணநாயகத்தோடு
பந்தயத்தில்
நொண்டி மாடுகளாய்
சனநாயகவாதிகள்.

அலங்காரங்களுக்கும்
விளம்பரங்களுக்கும்
மத்தியில்
ஆட்பட்டு
செத்துமடியும் குடியரசு.

சாதியும் மதமும்
சரியாக அலசப்பட்டு
மக்களை மந்தைகளாகவே
பாதுகாக்க நடக்கும்
திருவிழா.

காய்ந்த தலையும்
கந்தை துணியும்
கை கூப்பித்
தொழப்படும் கனவுக் காலம்.

கருப்பு பணங்கள்
வெள்ளை மனங்களை
வெட்டிச் சாய்க்கும்
கருப்பு தினம்.

ஓடி ஓடி
உழைப்பவரை
உண்டு கொழுப்பவர்
வெண்று களித்திடும்
வெரிநாள்

கற்பனைகளையே
விற்பனை செய்யும்
கட்சிகளின் சந்தை

கவிதைக்கு
சொற்களைத் தேடினாலும்
போலிகளே முந்திவரும்
கலைக்களஞ்சியம்