Tuesday, December 7, 2021

வேண்டும்


கைப்பிடித்து காலார நடக்க வேண்டும்
கதை கதைத்து கண் குளிர்ந்து சிரிக்க வேண்டும்
தைப்பொங்கல் போல நெஞ்சம் பொங்க வேண்டும்
தமிழ்ப் பேசி உலகமெல்லாம் திரிய வேண்டும்
பொய்ப் பேசி சண்டையிட்டு பிரியவேண்டும்
பொறுக்காமல் மறுகணமே இணையவேண்டும்
நொய்க் கஞ்சி போலத்தான் கொதிக்க வேண்டும்
நோன்பை போல் காதலைத் தான் மதிக்க வேண்டும்
மெய்த்தீண்டி மென்னுணர்வால் ஈர்க்கவேண்டும்
மேலுலகு கீழுலகு வெல்ல வேண்டும்

அன்றாடச் சிக்கல்களை மறக்க வேண்டும்
அரிசி பருப்பு போதாமை ஒதுக்க வேண்டும்
நன்றாக புரிந்துநாம் நடக்க வேண்டும்
நாற்றிசையும் நமக்காக விடிய வேண்டும்
தின்றதையே தின்னுவதை தள்ள வேண்டும்
தினம் புதுமை எண்ணத்தில் கொள்ள வேண்டும்
என்றும் இளமை மனத்தோடு இருக்க வேண்டும்
அப்படியே இந்த வாழ்வை வாழ வேண்டும்


நான் நினைக்கும் நேரம் நீ எனக்கு வேண்டும் நாளெல்லாம் உன்நினைப்பே எனக்கு வேண்டும்
தான் நினைத்து நடப்பதையே நிறுத்த வேண்டும்
தனக்காக வாழ்வதையே தவிர்க்க வேண்டும்
வானிடிந்து வீழ்ந்தாலும் உறுதி வேண்டும்
வாஞ்சையோடு வாழ்வையே  வாழ வேண்டும்
தேனிலவு மனத்தோடு தினமும் வேண்டும்
தெவிட்டாது அன்பை பறிமாற வேண்டும்

பூவுக்குள் மணமாக இருக்க வேண்டும்
 புத்தாண்டின் முதல் நாளாய் பிறக்க வேண்டும்
நாவுக்குள் தமிழாக  மணக்க வேண்டும்
நடைநடந்து பூமியை ரசிக்க வேண்டும்
சாவுக்கும் அஞ்சாமல் எதிர்க்க வேண்டும்
சந்தனமாய் அன்பையே அணிய வேண்டும்
கோவுக்கும் பணியாத கொள்கை வேண்டும்
கொடையாக உயிரையும் கொடுக்க வேண்டும்






No comments: