Sunday, December 16, 2007

உருப்படுமோ இந்த ஞாலம்?

திங்களிலும் மனிதர் சென்றார்
திசையெட்டும் பறந்து சென்றார்
எங்கெங்கு வளங்கள் உண்டோ
எல்லாமும் கவர்ந்துக் கொண்டார்

தங்கத்தை வெட்டி னார்கள்
தண்ணீரை உறிஞ்சி னார்கள்
சிங்கத்தைக் கூட்டில் வைத்தார்
சிறுவிலங்கை விரட்டி விட்டார்

பசுமைசூழ் காட்டை யெல்லாம்
பாலையாய் ஆக்கி விட்டார்
விசும்பினிலும் ஓட்டை யாகும்
வேண்டாத வாயுச் சேர்த்தார்

இயற்கையை அழித்து விட்டால்
எப்படித்தான் வாழ்வோம் என்ற
உயரறிவை இழந்து நின்றார்
உருப்படுமோ இந்த ஞாலம்?

No comments: