Monday, February 22, 2010

எழுந்து வாடா

தன்னினத்தை எல்லோரும் உணருகின்றான்
மண்மொழியைக் காத்திடவே ஓடுகின்றான்
தன்மானம் இல்லாத தமிழா நீதான்
அன்னை நாடெனவே புலம்புகின்றாய்
அண்மையிலே ஐதராபாத் நகரத்திலே
அன்புதமிழ் இளைஞரும் யுவதிகளும்
நன்மதிப்பெண் பெற்றார்கள் பொதுத்துறையின்
பொன்னான வேலைக்கு ஆளெடுப்பில்

தெலுங்கானா கோருகின்ற தெலுங்கரெலாம்
வலுக்கட்டா யமாக ஒன்றிணைந்து
இளைஞர்கள் அனைவரையும் ஓடோட
கொலைவெறியால் அடித்துதைத்து விரட்டினார்கள்
வலுவாக தம்மெதிர்ப்பை யாருமிங்கே
சிலர்கூடக் காட்டவில்லை தமிழர்களே
குலமானம் காத்திடவே துணியவில்லை
சிலைபோலே இருக்கின்றார் அவமானம்

தமிழ்வீரன் மாண்டாலும் கலங்கமாட்டாய்
தமிழ்நதிகள் காய்ந்தாலும் கலங்கமாட்டாய்
உமிழ்நீரின் சுவைகண்டு உறங்குகின்றாய்-சாதி
சிமிழுக்குள் சந்ததியைப் புதைக்கின்றாய்
தமிழ்நாட்டை திரைநாய்க்கே விற்றுவிட்டாய்
தமிழ்வீட்டை தொடர்களிலே தொலைத்துவிட்டாய்
இமியளவும் இனமானம் இல்லையாடா
உமியாக வாழ்வதிலோர் பொருளுமுண்டா

இனத்துக்கோ மொழிக்கோ இன்னலென்றால்
கணத்துக்குள் களமிறங்கி ஆடவாடா
பணத்துக்கும் புகழுக்கும் பல்லிளித்தால்
உனக்கேது உடலுக்குள் தமிழ்குருதி
அனலாக அடங்காது தமிழ்பகையை
சினங்கொண்டு சீறியுடன் எரிக்கவாடா
பிணமாகக் கிடக்காமல் பீடுகொண்டு
இனமானத் தமிழனாக எழுந்துவாடா

No comments: