Friday, March 8, 2013

மலரல்ல நாங்கள் இனி

வன்புணர்ச்சி வெறியாட்டம்
வழக்காகிப் போனதிங்கே
பெண்ணுரிமை முழக்கமெல்லாம்
போலியாகிப் போனதிங்கே

கண்ணில்லாப் பெண்டிரையும்
கைத்தவழும் குழவியையும்
தன்னந்தனியாய் வாழும்
தளர்ந்த முதியவளையும்

எண்ணிப் பார்க்க முடியாதபடி
எத்தனையோக் கொடுமை செய்து
வன்புணர்ச்சி செய்கின்ற
வல்லூறு கூட்டமிங்கே

பெண்களுக்கு வேண்டும் உடை
பேடிகளும் முன் மொழிந்து
ஆண்களின் வக்கிரத்தை
ஆதரிக்கும் அசிங்கமிங்கே

வசதியுள்ள பெண்ணென்றால்
வலுக்கின்ற போராட்டம்
வசதியற்ற உயிரென்றால்
வாய் மூடி மௌனிவேடம்

மன நோயாளிகளின்
மந்தையாகிப் போன நாட்டில்
இனப்பற்றும் மொழிப்பற்றும்
இல்லாத தேசத்தில்

மடிசுமந்த தாயென்றும்
மனம் கவர்ந்த மங்கையென்றும்
அடிதொடரும் தங்கையென்றும்
அரக்கர்கள் நினைப்பதில்லை

உரிமைகளைப் பெறுவதற்கு
உரத்த குரல் கொடுக்கும் நாளில்
எரியீட்டி ஏந்தி மகளிர்
எல்லோரும் சேர்ந்திடுவோம்

உறுதிகொண்ட நெஞ்சோடும்
உண்மை அன்பு வீரத்தோடும்
சிறிதளவும் அச்சமின்றி
சினம் சுமந்து எழுந்திடுவீர்

மகளிர் நாள் செய்தியாக
மக்களுக்கு சொல்லி வைப்போம்
மலரல்ல நாங்கள் இனி
மருந்துவெடி குண்டென்று

வறியராய் இருந்தாலும்
வரலாற்றைப் படைத்திடுவோம்
அறியாமைத் தீயிலிட்டு
அடைந்திடுவோம் பிறப்புரிமை

வன்மம் கொண்ட விழிகளையே
வாருங்கள் பிய்த்தெறிவோம்
நன்மனத்தால் நமைநோக்கும்
நடப்பினையே நாம் படைப்போம்

No comments: