Thursday, April 29, 2010

புரட்சிக்கவி

பாவேந்தன் பாட்டென்றால் அனல்பறக்கும்
பழமூட வழக்கங்கள் அழிந்தொழியும்
கூவுகின்ற குயில்பாட்டும் புரட்சியாகும்
குத்தீட்டிக் கவிதைகள் குவிந்திருக்கும்

ஆரியத்தை அழித்தொழிக்க அடியெடுத்தார்
ஆட்சிமொழி தமிழாகத் தடியெடுத்தார்
ஓரிடத்தில் குட்டையெனத் தேங்காமல்
ஊருலகம் பாட்டாலே சென்றடைந்தார்
யாரிடத்தில் உரைத்தாலும் அவர்பாட்டை
ஊறிவரும் உணர்வுவீச்சு கண்டிருப்பீர்
சூரியனாய் சுட்டெரிப்பார் கொடுவழக்கம்
சுத்ததமிழ் வீரர்பா வேந்தர்தான்

தமிழுக்கு எதிராக எவரேனும்
தம்கருத்தை வெளியிட்டால் கொதித்தெழுந்து
துமிக்கியென வெடித்திடுவார்; பாவேந்தர்
தூள்தூளாய் ஆக்கிடுவார் தமிழ்பகையை
இமியளவும் ஈரமிலா நெஞ்சத்தாரை
இழுத்துவந்து தெருவினிலேப் போட்டுதைப்பார்
தமிழ்த்தெருவில் தமிழ்க்கடையில் பெயர்ப்பலகை
தமிழிலேயே வைத்துவிட ஆனையிட்டார்

பொதுவுடைமை பகுத்தறிவுப் போர்வாளாய்
புதுவுலகம் படைக்கின்றப் புரட்சியாளன்
வதுவையர் உயர்த்துகின்ற காவியங்கள்
வழங்கியவன் வணங்காத பாட்டுவேந்தன்
முதுதமிழை மூச்சாகப் போற்றியவன்
மூடராக இருந்தவரை மாற்றியவன்
எதுவரினும் தன்கருத்தை நிறுவியவன்
ஏற்றமிகு கவிச்சித்தன் பாவேந்தன்

No comments: