Tuesday, October 6, 2015

எல்லாம் உனக்கு வசமாகும்

வாழ்க்கை என்பது வாழத்தான் நண்பா
வாழ்வைத் தொலைத்திட நினைப்பது பண்பா?

ஆயிரம் துயரம் நேரட்டும் வாழ்வில்
நீயதை வெல்ல துணிவோடு நேர்நில்

தோல்விகள் சூழ்ந்தால் சுறுசுறுப்பாகு
ஆல்வினை யால்நீ வென்றிட ஏகு

வீட்டுக் குள்ளே ஒலிந்து கிடந்தால்
கீற்றுக் கூரையும் பாதாளம்
கூட்டைவிட்டு வெளியே வாநீ
வெளிச்சக் கீற்றாய் ஆகாயம்

செய்யும் தொழிலில் செம்மை இருந்தால்
செல்வம் உன்னைத் தாலாட்டும்
கையும் வாயும் மெய்யாய் இருந்தால்
கடவுளும் உன்னை தோளேற்றும்

காதலில் தோல்வி என்றால் எதற்கு
கழுத்தினில் தூக்குக் கயிறுனக்கு
சாதனைப் புரிந்திட வழிகள் இருக்க
சழக்குகள் வேண்டாம் சாதிப்பாய்

தோழமை தேர்ந்திட தெரியா உனக்கு
தோல்விகள் தானே பரிசாகும்
ஏழமை ஆயினும் நேர்மை இருந்தால்
எல்லாம் உனக்கு வசமாகும்

No comments: