Monday, July 21, 2014

கடமை

என்ன  நடந்தாலும்  ஏனென்று கேட்காமல்
மண்ணை மொழியை மறந்து கிடக்கின்றார்
திண்ணை உறக்கத்தில் தீந்தமிழ் மாந்தர்கள்
என்னே கொடுமை இது

பாவலர்கள் பாட்டினிலே பாசாங்கு பம்மாத்து
நாவலர்கள் பேச்சினிலே நாளெல்லாம் மாய்மாலம்
காவலர்கள் காட்டாட்சி காடுமலை ஆறுகொள்ளை
ஈவிரக்கம் இல்லையே இங்கு

வீதியிலே வன்முறை வெறியாட்டம் நாட்டினிலே
நாதியில்லை கேட்பதற்குச் சேதிகளை ஏட்டினிலே
ஊதிப் பெருக்கிடவே ஊரிலுள்ள ஊடகங்கள்
நீதியின்றி நிற்கின்ற தேன்

நீதிநூல் தாம்கற்றும் நிம்மதியாய்  வாழவழி
ஏதிங்கே தோழா இளைஞர்கள் வன்முறையில்
மோதி கொலையுண்டு வன்புணர்வில் மங்கையரை
ஊதி எரிக்கின்றார் ஊர்

நாட்டில் நடக்கின்ற காட்சிகளைக் காணுங்கால்
ஏட்டில் எழுதவொண்ணா ஏக்கம் விரிகிறது
போட்டிக்குப் போட்டியாய்ப் பொதுமக்கள் பொய்யணிந்து
நாட்டில் நடக்கின்றார் நன்கு

அவரவர் தங்கடமை ஆற்றுதற்கு இந்நாட்டில்
தவறாதுசட்டங்கள் தாள்களில் இருக்க
எவரும் ஏற்றிடவே எப்போதும் கேளாத்
தவறும் தடியரைத் திருத்து

1 comment:

Unknown said...

சிறப்பு