Thursday, May 1, 2014

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்

பூமித் தோன்றிய நாள்முதலாய்            
          பொய்யும் புரட்டும் உலவுது
சாமியின் பேரால் சாமானியர்கள்
          சதியில் மாட்டித் தொலையுது
உழைக்கும் மக்கள் வாழ்க்கையிலே
         ஒருஅடி ஏற்றமும் முடியலே
கொழுக்கும் கொள்ளையர் வீட்டிலே
      கோடி கோடியாய் புரளுது

ஓட்டுக் கேட்டு வந்தவனெல்லாம்
           கோட்டைக் கொத்தள வாழ்விலே
வேட்டியும் இல்லைத் தொழிலாளருக்கு
           வெட்கம் கெட்ட நாட்டிலே
அடிப்படைக் கல்வி எல்லோருக்கும்
           அவசியம் என்பது தெரியலே
மடிக்கணினி ஏமாற்று நாடகம்
           மானங் கெட்ட நாட்டிலே

மகளிர் பயமின்றி நடமாட முடியல
          மகாத்மா பிறந்த மண்ணிலே
தகனம் செய்யவும் தனி சுடுகாடு
         தமிழ்த் தேசிய மண்ணிலே
காதலைப் போற்றும் காவியம் நூறு
        கழக இலக்கியம் முதலாக
ஆதலால் அனைவரும் காதலித்திட
         அனுமதி உண்டா? இல்லையே

எல்லாம் போலி வேடம் தானே
       ஏன் இன்னும் தெரியலே?
உள்ளம் முழுதும் மனுவின் ஆட்சி
        உயர்ந்த சாதி திமிராலே
கள்ளம் இல்லா ஏழைகள் இன்னும்
        கண்ணை மூடி இருப்பதா
எல்லாம் துணிந்து எதிர்ப்பீர்
      எத்தனை காலம்தான் ஏமாறுவீர்

No comments: