Wednesday, November 24, 2010

பெருவலி

எழுதிட நாளும் நினைக்கிறேன்
எதையோ எழுதிக் குவிக்கிறேன்
முழுவதும் கவிதை என்றிட
முடியாமல் நானும் தவிக்கிறேன்
பழுதிலாப் பாடல் படைத்திட
பலமுறைக் காகிதம் கிழிக்கிறேன்
வழுவிலா வாழ்க்கை அமைந்திட
வரிகளில் கருத்தை படைக்கிறேன்

படித்திடப் புத்தகம் திறக்கிறேன்
பார்த்து வேர்த்து மலைக்கிறேன்
வடித்திடக் கவிதை நினைக்கிறேன்
வாய்க்கும் நெஞ்சுக்கும் நடிக்கிறேன்
துடித்திடும் நெஞ்சின் வலிகளை
தும்பைப் பூதாள் இறக்கிட
படித்திடும் வாசகர் அடைந்திட
பக்குவம் தெரியாமல் விழிக்கிறேன்

புவியுடை பொறுமை இல்லாமல்
புதுப்புது முயற்சிகள் செய்கிறேன்
எதுவென கவிதைப் புரிபட
இதுநாள் வரையினில் முயல்கிறேன்
புவியினைப் புரட்டிய புலவரே
புதுமைப் பூக்கும் முத்தமிழே
கவிதை எழுதிடக் கைகொடு
காலம் நிலைத்திட மடிகொடு

No comments: