Saturday, December 25, 2010

சேவகர்

திடீரென்று தெருக்களில்
சமூக சேவகர்கள்
படையெடுக்கின்றார்கள்.

குப்பைகளை அள்ளுகிறார்கள்
குழந்தைகளைக் குளிக்கவைக்கிறார்கள்
தொப்பைகளைத் தூக்கிக்கொண்டும்
தெருத்தெருவாக நடக்கிறார்கள்

மகளிர் குழுக்களுக்கு
மாமன்கள் போல
புடவைகள் கொடுத்து
போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள்.

ஒரு கிலோ
சர்க்கரைக் கொடுத்து
ஒரே நாளில்
ச.ம.உ ஆகிடத் துடிக்கிறார்கள்.

பொதுநல விரும்பிகளாக
பொழுதெலாம் காட்டிக்கொண்டு
அறுவடை செய்திட
அடுத்த தேர்தலை எதிர்நோக்குகிறார்கள்.

மரண வீடுகளில்
மாலைகளோடு வந்து
அழுபவர்களிடத்திலும்
ஆதரவு திரட்டுகிறார்கள்.

தேர்தல் முடிந்துவிட்டல்
திரும்பிப் பார்க்காமல்
நான்காண்டு காலம்
காணாமல் போவார்கள்.

சமூக சேவகர்கள்
நடிப்பையே மூலதனமாக்கி
நாட்டு மக்களை
மொட்டையடிப்பார்கள்.

முடி வளரும்
என்ற நம்பிக்கையிலேயே
நன்றாக மறுபடி மறுபடி
தலையை நீட்டும் பொதுமக்கள்

Wednesday, November 24, 2010

பெருவலி

எழுதிட நாளும் நினைக்கிறேன்
எதையோ எழுதிக் குவிக்கிறேன்
முழுவதும் கவிதை என்றிட
முடியாமல் நானும் தவிக்கிறேன்
பழுதிலாப் பாடல் படைத்திட
பலமுறைக் காகிதம் கிழிக்கிறேன்
வழுவிலா வாழ்க்கை அமைந்திட
வரிகளில் கருத்தை படைக்கிறேன்

படித்திடப் புத்தகம் திறக்கிறேன்
பார்த்து வேர்த்து மலைக்கிறேன்
வடித்திடக் கவிதை நினைக்கிறேன்
வாய்க்கும் நெஞ்சுக்கும் நடிக்கிறேன்
துடித்திடும் நெஞ்சின் வலிகளை
தும்பைப் பூதாள் இறக்கிட
படித்திடும் வாசகர் அடைந்திட
பக்குவம் தெரியாமல் விழிக்கிறேன்

புவியுடை பொறுமை இல்லாமல்
புதுப்புது முயற்சிகள் செய்கிறேன்
எதுவென கவிதைப் புரிபட
இதுநாள் வரையினில் முயல்கிறேன்
புவியினைப் புரட்டிய புலவரே
புதுமைப் பூக்கும் முத்தமிழே
கவிதை எழுதிடக் கைகொடு
காலம் நிலைத்திட மடிகொடு

Monday, November 8, 2010

புதுவையில் பாரதி

எட்டய புரத்தினில் எழுந்த நெருப்பவன்
எங்கள் கவிபாரதி
கிட்டிய வரமென கீர்த்திப் பெரிதென
கிடைத்த நவபாரதி
தொட்டில் குழவியும் தூயப் பெரியோரும்
தோழமைக் கொண்டிடுவார்
கட்டிய வேட்டியும் காலில் சப்பாத்தும்
கண்டவர் மெய்சிலிர்ப்பார்

புதுவையில் தங்கியப் புரட்சி நெருப்பவன்
புதுமை பலபடைத்தான்
இதுவரை எழுதாத இறவாத இலக்கியம்
இங்கேதான் படைத்தான்
வதுவையர் உரிமைக்கு பாஞ்சாலி சபதம்
வார்த்து எழுதிவைத்தான்
புதுமையாய்க் குயில்பாட்டு புரட்சியை இங்குதான்
புடம்போட்டு பாடிவைத்தான்

மணக்குள விநாயகர் மாண்புகள் போற்றியே
மகத்தான பாடல் படைத்தான்
கணக்கின்றி கவிதைகள் கண்ணன் மேல்பாடி
காதலை எடுத்துரைத்தான்
உணர்வோடு குயில்தோப்பில் உலாவந்தவன்
உட்பொருள் புரியவைத்தான்
உணவுக்கு வைத்தரிசி உற்சாகப் படையலிட்டு
உறவாக காக்கை நினைத்தான்

அதிகாலைப் பொழுதினில் அலைகடல் மணலில்
ஆனந்தமாய் நடப்பான்
உதிக்கின்ற சீரியன் மறைகின்ற காட்சியும்
உணர்வோடு கண்டுகளிப்பான்
நிதியில்லை என்றாலும் நெஞ்சினை நிமிர்த்தியே
நித்தமும் நடைபயில்வான்
நதிபோலே எப்போதும் தடைதாண்டி தம்பயணம்
நன்றாக தொடர்ந்துசெல்வான்

பாரதி வந்ததால் பழையன கழிந்துமே
புதுச்சேரி யானதிங்கே
பாரதி வாழ்ந்ததால் பாரத தேசமே
பார்வையைத் திருப்பியது
பாரதி காட்டிய புதுநெறிப் பாவலர்
பாட்டையை மாற்றியது
பாரதி ஓட்டிய 'பா'ரதம் புதுமைக்குப்
பாடமாய் ஆனதிங்கே

பாரதிக் கழற்றி கனகலிங்கம் ஏற்றிப்
பூணூலைப் புனிதமாக்கினான்
பாரதி பூனைப் பாட்டாலே ஒற்றுமை
பாரினில் வழிகாட்டினான்
பாரதி புதுமைக்கு புதுவையே முதற்களம்
பாடுவோம் தோழர்களே
பாரதிக் காப்பென்று பல்லாண்டு பாடுவோம்
பாடுவோம் வாருங்களேன்

Sunday, August 22, 2010

மாற்றிக் காட்டுவோம்

மாற்றம் என்பதே மாறாத் தத்துவம்
மார்க்சிய அறிஞரின் மந்திர வாசகம்
ஏற்றம் பெற்றிட ஏழைகள் வாழ்வில்
ஏற்றுவோம் உரிமை விளக்கினை நாளும்
கூற்றுவன் நினைத்து குலைந்துப் போகாமல்
வேற்றுமைகள் போற்றி பிரிந்து நிற்காமல்
மாற்றிக் காட்டிட மானுட சமுத்திரம்
போற்றிக் காத்திட புறப்படுத் தோழனே

கேடுகள் சூழ்ந்தக் கீழ்மை உலகினைக்
கிளர்ச்சி செய்தே கீழ்மேல் புறட்டி
மேடுகள் பள்ளம் ஓர்மை யாக்கி
மேதினி எங்கும் பொதுமைப் புகுத்திக்
கோடுகள் அற்றக் கோளப் படத்தினைப்
கொண்டே உலகில் குடிகள் வாழ்ந்திட
பீடுடை பொதுமை உலகினை நாமும்
படைப்போம் வாரீர் பாரை நன்றாய்

Tuesday, August 17, 2010

உடல் தானம்

குருதிக் கொடையளிக்க
கூவி அழைத்தாலும்
கூப்பிட்டால் வருவோர் யார்
குமுகாய வீதிகளில்

உறுப்பு கொடையளிக்க
உற்றாரும் உறவுகளும்
விருப்போடு வருவதில்லை
வீணாச்சு பல உயிர்கள்

கண்ணப்பன் விழிக்கொடை
கர்ணனவன் குருதிக்கொடை
கர்மவீரன் ஜிதேந்திரன்
காட்டிய உடல்கொடை

வாழும் தலைமுறைக்கு
வழிகாட்டி சென்றபின்னும்
பாழும் மடமைகளால்
பார்த்திருத்தல் சரிதானா?

மூளை இறந்தபின்னே
முழு நிலமை புரிந்தபின்னே
ஆளை இழந்தபின்னே
அழுது புலம்புவதேன்?

மரங்கூட கிளைகொடுத்து
மண்ணில் பலமரங்கள்
வரமாக அளிக்கிறதே
வாழக் கற்றுக் கொள்வோம்

செயலிழந்த உடலுக்குள்
சாகாத உறுப்புகளை
இயலாத மாந்தருக்கு
எடுத்து வைத்தல் நலந்தானே?

செத்தபின்னே சிவலோகம்
செல்லுவதை யாரரிவார்
புத்தியுடன் உடல்கொடை
பூமிக்கே பெருங்கொடை

Thursday, July 29, 2010

செம்மொழி

பிறந்த பெருமையினை
மறந்த தமிழர்களும்
சிறந்து வளர்ந்த தமிழ்
செம்மொழியாய் ஆனதென்று
செம்மார்ந்து நிற்க்கின்றார்.

வழக்கொழிந்த வரிசையிலே
வண்டமிழை நிறுத்துதற்கு
கழைக் கூத்தாடி போல
காட்சிகளை நடத்துகின்றார்.

பிள்ளைமொழி தமிழில்லை
பேச்சுமொழி தமிழில்லை
பள்ளியிலே தமிழில்லை
பல்லிளித்தே புகழுகின்றார்

இருப்பதைக் காப்பதற்கே
இயலாத ஈனர்கள்
பெருக்குவதாய் புளுகுமூட்டை
பேணர்கள் வைக்கின்றார்.

நெருக்கடிகள் வந்தால்தான்
நினைக்கின்றார் தாய்மொழியை
செருப்படிகள் பட்டபின்பே
செந்தமிழை சீண்டுகின்றார்

வருவோன் போவோன் எல்லாம்
வாய்கிழியப் பேசுகின்றான்
வருவாயை சுருட்டிடவே
வாழ்க தமிழ் என்கின்றான்

யாரென்ன செய்தாலும்
எந்நாளும் இளமையுடன்
எந்தமிழும் விளங்கிடுமே
எதிரிகளை இனங்காண்போம்